அல்லாஹ்வின் பாதையில் நீ செலவழித்த ஒரு தீனார், ஓர் அடிமையை உரிமையிடுவதற்காக நீ செலவழித்த ஒரு தீனார், ஒரு…

அல்லாஹ்வின் பாதையில் நீ செலவழித்த ஒரு தீனார், ஓர் அடிமையை உரிமையிடுவதற்காக நீ செலவழித்த ஒரு தீனார், ஒரு ஏழைக்கு நீ தர்மமாக வழங்கிய ஒரு தீனார், உனது குடும்பத்திற்கு நீ செலவழித்த ஒரு தீனார். இவற்றில் அதிக நன்மை கொண்டது, உனது குடும்பத்திற்காக நீ செலவழிக்கும் தீனாரே

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் பாதையில் நீ செலவழித்த ஒரு தீனார், ஓர் அடிமையை உரிமையிடுவதற்காக நீ செலவழித்த ஒரு தீனார், ஒரு ஏழைக்கு நீ தர்மமாக வழங்கிய ஒரு தீனார், உனது குடும்பத்திற்கு நீ செலவழித்த ஒரு தீனார். இவற்றில் அதிக நன்மை கொண்டது, உனது குடும்பத்திற்காக நீ செலவழிக்கும் தீனாரே.

[சரியானது] [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

இங்கு நபியவர்கள், செலவழித்தலின் சில வகைகளை விளக்கும் விதமாகப் பின்வருமாறு கூறுகின்றார்கள் : அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதற்கு செலவழிக்கும் தீனார், ஓர் அடிமையை உரிமையிடுவதற்காக செலவழிக்கும் தீனார், தேவையுள்ள ஓர் ஏழைக்கு செலவழிக்கும் தீனார், உனது குடும்பத்திற்காக செலவழிக்கும் தீனார். பின்பு நபியவர்கள், அவற்றில் மிகச் சிறந்தது, உனது குடும்பத்திற்காகவும், உனது செலவுக்கு உட்பட்டவர்களுக்காகவும் செலவழிக்கும் தீனாராகும் என்றும் கூறுகின்றார்கள்.

فوائد الحديث

அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதற்கான வாயில்கள் அதிகமாக உள்ளமை.

பல வழிகள் ஒன்றிணையும் போது, மிக முக்கியமானதை முற்படுத்தல். உதாரணமாக, அனைத்து வழிகளிலும் செலவழிக்க முடியாத போது, குடும்பத்திற்கு மாத்திரம் செலவழித்தல்.

முஸ்லிம் கிரந்தத்தின் விரிவுரையில் இமாம் நவவி இவ்வாறு கூறுகின்றார்கள் : குடும்பத்திற்கு செலவழிக்க ஆர்வமூட்டல், மேலும் அதற்குரிய மகத்தான நன்மை பற்றித் தெளிவுபடுத்தல். ஏனெனில், அவர்களில் சிலர், உறவுகள் எனும் அடிப்படையில் செலவழிப்பது கட்டாயமானவர்கள். அவர்களில் சிலருக்கு செலவழிப்பது விரும்பத்தக்கதாக இருக்கும். அப்போது, அது தர்மமாகவும், உறவுகளைச் சேர்ந்து நடப்பதாகவும் இருக்கும். அவர்களில் சிலருக்கு திருமணம் அல்லது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைகள்) அடிப்படையில் செலவழிப்பது கட்டாயமாக இருக்கும். இவையனைத்தும் வலியுறுத்தப்படும் சிறப்பான செலவினங்களாகும். சாதாராண உபரியான தர்மத்தை விட இது சிறந்தது.

ஸின்தீ அவர்கள் கூறுகின்றார்கள் : 'குடும்பத்திற்காக செலவழிக்கும் தீனார் என்பது, அல்லாஹ்வின் திருப்தியை நாடி, அத்துடன் குடும்பத்தின் கடமையை நிறைவேற்றுதல் போன்ற நாட்டமும் இருந்தாலாகும்.

அபூ கிலாபா அவர்கள் கூறுகின்றார்கள் : சிறிய ஒரு குடும்பத்திற்கு செலவழித்து, அவர்களைக் கையேந்துவதை விட்டும் காக்கவோ, அல்லது அவர்களுக்கு அந்த செலவின் மூலம் பயன்பெறவைத்து அவர்களைத் தேவையற்றவர்களாக ஆக்கவோ செய்யும் அந்த மனிதனை விட, அதிகம் கூலி பெறும் வேறு எந்த மனிதர் தான் இருக்க முடியும்?

التصنيفات

செலவளித்தல், உபரியான தர்மம்