'ரமழான் வந்துவிட்டால், சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும். நரகத்தின் வாயில்கள் மூடப் பட்டுவிடும்.…

'ரமழான் வந்துவிட்டால், சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும். நரகத்தின் வாயில்கள் மூடப் பட்டுவிடும். ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு விடுவர்.'

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'ரமழான் வந்துவிட்டால், சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும். நரகத்தின் வாயில்கள் மூடப் பட்டுவிடும். ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு விடுவர்.'

[صحيح] [متفق عليه]

الشرح

இங்கு நபியவர்கள், ரமழான் மாதம் வந்துவிட்டால் மூன்று விடயங்கள் நிகழுவதாக அறிவிக்கின்றார்கள்: முதலாவது : சுவனத்தின் வாயில்கள் திறக்கப் படுகின்றன. எனவே அதன் எந்த வாயிலும் மூடப்பட மாட்டாது. இரண்டாவது : நரக வாயில்கள் மூடப்படும். எனவே, அதன் எந்த வாயிலும் திறக்கப்படமாட்டாது. மூன்றாவது : ஷைத்தான்களும், கட்டுக்கடங்காத ஜின்களும் சங்கிலியால் கட்டப்படுவார்கள். எனவே, ரமழான் அல்லாத காலங்களில் நெருங்க முடியுமான விடயங்களுக்கு அவர்களால் ரமழானில் நெருங்க முடிவதில்லை. இவை அனைத்தும் இந்த மாதத்தை மகத்துவப்படுத்துவதாகும். மேலும், அமல்களில் ஈடுபடுபவர்கள் தொழுகை, தர்மம், திக்ர், குர்ஆன் ஓதல் போன்ற வணக்கங்களை அதிகபடுத்தவும், பாவங்களைத் தவிர்க்கவும் இது ஊக்குவிக்கின்றது.

فوائد الحديث

ரமழான் மாதத்தின் சிறப்பு

இதில், இந்த பரக்கத் செய்யப்பட்ட மாதம், நன்மைக்கும், வணக்கங்களுக்குமான ஒரு பருவ காலம் என்ற ஒரு நற்செய்தி நோன்பாளிகளுக்கு உள்ளது.

ரமழானில் ஷைத்தான்கள் விலங்கிடப் படுவதென்பது, ஒரு முஃமினுக்கு சாக்குப் போக்குகள் கூறமுடியாது என்பதை உணர்த்துகின்றது. அதாவது, உன்னை விட்டும் சைத்தான்கள் தடுக்கப்பட்டுள்ளனர். எனவே, வணக்கங்களை விட்டுவிடவும், பாவங்களைச் செய்யவும் அவர்களைக் காரணமாகக் காட்டாதே என்று கூறுவது போல் உள்ளது.

குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : ரமழானில் அதிகமாகப் பாவங்களும், தீமைகளும் நடைபெறுவதை நாம் எவ்வாறு காணலாம்? சைத்தான்கள் விலங்கிடப்பட்டிருந்தால் அவ்வாறு நடக்கமுடியாதே என்று கேட்கப்பட்டால், நாம் பின்வருமாறு பதிலளிக்கலாம்:

அதாவது, இந்த நிலை கூறப்படுவது, நிபந்தனைகளையும், ஒழுக்கங்களையும், பேணிக் கொள்ளும் நோன்பாளிகள் தொடர்பாகவே. அல்லது விலங்கிடப்படுவது அனைத்து ஷைத்தாண்களும் அல்லாமல், - முன்கூறிய அறிவிப்புக்களில் வந்துள்ள பிரகாரம் - கட்டுக்கடங்காத ஷைத்தான்கள் எனப்படும் சில சைத்தான்களே. அல்லது அம்மாதத்தில் தீமைகள் குறைவாகவே நிகழும் என்பதை உணர்த்துவதாக இருக்கலாம். இது கண்ணால் காணமுடியுமான ஒன்றே. அதாவது, தீமைகள் ஏனைய காலங்களை விட இம்மாதத்தில் குறைவாகவே நிகழுகின்றன. ஏனெனில், அவர்கள் விலங்கிடப்படுவதால், தீமைகளோ, பாவங்களோ நிகழவே கூடாது என்ற கட்டாயம் கிடையாது. ஏனெனில், அவ்வாறு நிகழ ஷைத்தான்கள் அல்லாத கெட்ட ஆத்மாக்கள், அசிங்கமான பழக்கங்கள், மனித ஷைத்தான்கள் போன்ற காரணிகளும் உண்டு.

التصنيفات

நோன்பின் சிறப்பு