“யார் இரு பெண் பிள்ளைகளை பருவ வயது வரை பொறுப்பேற்று, வளர்க்கின்றாரோ, அவர் மறுமையில் என்னோடு இப்படி வருவார்”…

“யார் இரு பெண் பிள்ளைகளை பருவ வயது வரை பொறுப்பேற்று, வளர்க்கின்றாரோ, அவர் மறுமையில் என்னோடு இப்படி வருவார்” என்று கூறிவிட்டு தமது விரல்களை இணைத்துக்காட்டினார்கள்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: “யார் இரு பெண் பிள்ளைகளை பருவ வயது வரை பொறுப்பேற்று, வளர்க்கின்றாரோ, அவர் மறுமையில் என்னோடு இப்படி வருவார்” என்று கூறிவிட்டு தமது விரல்களை இணைத்துக்காட்டினார்கள்.

[சரியானது] [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

யாருக்கு இரு பெண் பிள்ளைகளோ, சகோதரிகளோ வழங்கப்பட்டு, அவ்விருவரும் பருவயதை அடையும் வரை செலவழித்து, ஒழுக்கமூட்டி, நல்வழிகாட்டி, தீமைகளை விட்டும் தடுத்து அவர்களை ஆளாக்குகின்றாரோ, அவர் மறுமையில் தன்னோடு இவ்வாறு வருவார் என்று கூறிவிட்டு நபியவர்கள் தமது ஆட்காட்டி மற்றும் நடு விரல்களை இணைத்துக்காட்டுகின்றார்கள்.

فوائد الحديث

பெண்பிள்ளைகளையும், சகோதரிகளையும் பொறுப்பேற்று, அவர்கள் திருமணம் முடிக்கும் வரையோ, பருவ வயதை அடையும் வரையோ யார் செலவழித்து, ஒழுக்கமூட்டி வளர்க்கின்றாரோ அவருக்கு மகத்தான கூலி உண்டு.

ஆண் பிள்ளைகளைப் பொறுப்பேற்று வளர்ப்பதை விட, பெண்பிள்ளைகளை பொறுப்பேற்று வளர்ப்பதற்கான கூலி அதிகமாகும். ஏனெனில், ஆண்பிள்ளைகள் விடயத்தில் இவ்வாறு கூறப்படவில்லை. அதாவது, பெண்பிள்ளைகளுக்கு செலவழிப்பதும், அவர்களது விவகாரங்களைக் கவனிப்பதும் ஆண்பிள்ளைகளை விட சிரமமானது. ஏனெனில் அவர்கள் வீட்டில் இருப்பவர்கள்; அவர்களது விவகாரங்களை அவர்களால் நேரடியாகச் செய்யமுடியாது. ஆண்பிள்ளைகளைப் போல அவர்களால் நடந்துகொள்ளமுடியாது. அதேபோன்று எதிரிகளுக்கெதிராக பலம்பெறுதல், தன் பெயரையும் வம்சத்தையும் உயிர்ப்பித்தல் போன்ற அம்சங்களை ஆண்பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது போன்று, இவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது. எனவே அவர்களுக்காக செலவழிப்பவர், பொறுமையுடனும், நல்லுள்ளத்துடனும் செயற்படவேண்டிய தேவை உள்ளதால், அவருக்கு மகத்தான கூலி வளங்கப்படுகின்றது. அதனாலேயே, மறுமையில் அவர் நபியவர்களின் நெருங்கிய தோழராக இருப்பார்.

பெண் பருவ வயதை அடைவதற்கான அடையாளங்கள்: பதினைந்து வருடத்தைப் பூர்த்தி செய்தல், அல்லது அதற்கு முன்னராயினும் மாதவிடாய் ஏற்படல், அல்லது மர்மஸ்தான முடி முளைத்தல், அல்லது உறக்கத்தில் விந்து வெளியேறல்.

குர்துபி (ரஹ்) கூறுகின்றார்கள்: வயதை அடைவதென்பது, அவர்கள் சுயமாக செயற்பட முடியுமான ஒரு நிலைக்கு வருவதாகும். பெண்களைப் பொறுத்தவரை இது அவர்கள் தமது கணவரோடு ஒன்று சேரும் வரையாகும். இங்கு வயதை அடைவதன் அர்த்தம், அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதும், மார்க்க சட்டங்கள் கடமையாக்கபடுவதும் அல்ல. ஏனெனில், சிலவேளை அதற்கு முன்னரே அவள் திருமணம் முடித்துவிட்டால், கணவன் இருப்பதனால், பொறுப்பேற்றுள்ளவர் செலவழிக்கவேண்டிய அவசியம் இருக்காது. அதேபோன்று, அவள் மாதவிடாய் ஏற்பட்டு பருவவயதை அடைந்தாலும், சிலவேளை அவளால் தன் தேவைகளை தனித்துநின்று நிறைவேற்ற முடியாமல் இருக்கும். அவ்வாறு விடப்பட்டால் அவளது நிலைமை சீர்கெட்டுவிடும். உண்மையில், இந்த சந்தர்ப்பத்தில் தான், அவளைப் பாதுகாத்துப் பொறுப்பு நிற்கும் ஒருவர் அவசியமாகின்றது. ஏனெனில், அப்போதுதான், அவளைத் திருமணம் முடிக்க ஏனையோர் விருப்பம் கொள்வார்கள். இந்த கருத்திலேயே எமது உலமாக்கள், சிறுமி பருவ வயதை அடைந்தாலும், அவள் திருமணம் செய்து, கணவனுடன் இணையும் வரை, தந்தை மீதுள்ள செலவழிக்கும் பொறுப்பு நீங்கமாட்டாது எனக் கூறியுள்ளார்கள்.

التصنيفات

நல்லமல்களின் சிறப்புகள்