யாராவது ஒருவருக்கு, அல்லாஹ் தன்னை மறுமையின் துன்பங்களில் இருந்து பாதுகாப்பது மகிழ்ச்சியைத் தரும்…

யாராவது ஒருவருக்கு, அல்லாஹ் தன்னை மறுமையின் துன்பங்களில் இருந்து பாதுகாப்பது மகிழ்ச்சியைத் தரும் என்றிருந்தால், அவர் கஷ்டத்தில் இருக்கும் ஒரு கடனாளிக்கு அவகாசம் கொடுக்கட்டும், அல்லது தள்ளுபடி செய்யட்டும்

அபூ கதாதா (ரழி) அவர்கள் தம்மிடம் கடன்பெற்ற ஒருவரைத் தேடிச் சென்றபோது, அவர் ஒழிந்து கொண்டார். பின்பு அவரைக் கண்டபோது, “நான் கஷ்டத்தில் உள்ளேன்” என்று கூறினார் அவர். அதற்கு அபூ கதாதா அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாகவா? அல்லாஹ்வின் மீது ஆணையாகவா? எனக் கேட்டுவிட்டு, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக பின்வருமாறு அறிவித்தார்கள்: யாராவது ஒருவருக்கு, அல்லாஹ் தன்னை மறுமையின் துன்பங்களில் இருந்து பாதுகாப்பது மகிழ்ச்சியைத் தரும் என்றிருந்தால், அவர் கஷ்டத்தில் இருக்கும் ஒரு கடனாளிக்கு அவகாசம் கொடுக்கட்டும், அல்லது தள்ளுபடி செய்யட்டும்.

[சரியானது] [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

தனக்குத் தரவேண்டிய கடனைத் தராமல் ஒழிந்து கொண்டிருந்த ஒரு மனிதரை அபூ கதாதா அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் போது அவரைக் கண்டு கொண்டார்கள். அப்போது அம்மனிதர், 'நான் கஷ்டவாளி, கடனைத் திரும்பத் தருவதற்கான பணம் என்னிடம் இல்லை' எனக் கூறினார். தன்னிடம் பணம் இல்லை எனச் சத்தியம் செய்யும் படி அவரிடம் கேட்டார்கள். அவரும், தான் கூறுவது உண்மையே எனச் சத்தியம் செய்தார். அப்போது அபூ கதாதா அவர்கள், நபியவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக இவ்வாறு கூறினார்கள்: மறுமையின் துன்பங்கள், சிரமங்கள் மற்றும் பயங்கரங்களில் இருந்து பாதுகாக்கப்பட யார் விரும்புகின்றாரோ, அவர் சிரமத்தில் உள்ள ஒரு கடனாளியின் கடனுக்குத் தவணையை நீடித்துக் கொடுத்தோ, அல்லது கடனை பகுதியாகவோ, முழுமையாகவோ தள்ளுபடி செய்தோ இலகுபடுத்திக் கொடுக்கட்டும்.

فوائد الحديث

சிரமத்தில் உள்ள ஒரு கடனாளியின் கடனுக்கு வசதி வரும் வரை தவணையை நீடித்துக்கொடுத்தோ, அல்லது கடனை பகுதியாகவோ, முழுமையாகவோ தள்ளுபடி செய்தோ இலகுபடுத்திக்கொடுப்பது ஸுன்னாவாகும்

யாராவது ஒரு முஃமினின் உலகத் துன்பங்களில் ஒன்றை நீக்கிவிடுகின்றாரோ, அல்லாஹ் அவரது மறுமையின் துன்பங்களில் ஒன்றை நீக்கிவிடுவான். செயலை ஒத்ததாகவே கூலி வழங்கப்படும்.

கடமையானவை உபரியானவற்றை விடச் சிறந்தவை என்பதே பொதுவான விதியாகும். எனினும், சிலவேளைகளில், உபரியானவை, கடமையானவற்றை விடச் சிறந்தவையாக மாறிவிடும். கடனைத் தள்ளுபடி செய்வது உபரியான ஒன்றாகும். கடனாளியிடம் கடனைக் கேட்காமல் பொறுமையாக எதிர்பார்த்திருப்பது கடமையாகும். இங்கு, கடமையானதை விட உபரியானது ஏற்றமாகும்.

இந்த ஹதீஸ் சிரமத்தில் உள்ளவருக்கு மாத்திரம் உரியது. ஆனால், பணம் இருந்தும் இழுத்தடித்துக் கொண்டிருப்பவரைப் பொறுத்தவரை, நபி (ஸல்) அவர்கள், 'வசதியுள்ளவன் இழுத்தடிப்பது அநியாயமாகும்' என்று கூறியுள்ளார்கள்.

التصنيفات

கடன்