'நீங்கள் கூறுவது போன்றே நீங்கள் இருந்தால், அவர்களது வாய்களில் சூடான சாம்பலைப் போடுவது போன்ற வேலையையே நீங்கள்…

'நீங்கள் கூறுவது போன்றே நீங்கள் இருந்தால், அவர்களது வாய்களில் சூடான சாம்பலைப் போடுவது போன்ற வேலையையே நீங்கள் செய்கின்றீர்கள். நீங்கள் இவ்வாறே இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கெதிராக உங்களுக்கு உதவும் ஒருவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இருந்துகொண்டே இருப்பார்.'

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர் உள்ளனர். நான் அவர்களோடு சேர்ந்து நடந்தாலும் அவர்கள் என்னைத் துண்டித்து நடக்கின்றனர். அவர்களுக்கு நான் உபகாரம் புரிந்தாலும், அவர்கள் எனக்குத் தீங்கிழைக்கின்றனர். நான் அவர்களை மன்னிக்கின்றேன். ஆனால் அவர்களோ என்னோடு அறியாமைத் தனமாக நடந்து கொள்கின்றனர்.' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: 'நீங்கள் கூறுவது போன்றே நீங்கள் இருந்தால், அவர்களது வாய்களில் சூடான சாம்பலைப் போடுவது போன்ற வேலையையே நீங்கள் செய்கின்றீர்கள். நீங்கள் இவ்வாறே இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கெதிராக உங்களுக்கு உதவும் ஒருவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இருந்துகொண்டே இருப்பார்.'

[சரியானது] [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தனக்கு சில உறவினர் இருப்பதாகவும், அவர்களோடு தான் நல்லமுறையில் நடந்துகொண்டாலும் அவர்கள் அதற்கு நேர்மாற்றமாகவே நடக்கின்றனர் என்று முறைப்பட்டார். அதாவது, அவர்களைச் சேர்ந்து நடந்தாலும், அவர்கள் துண்டித்தே நடக்கின்றனர். அவர்களுக்கு நல்லுபகாரம் புரிந்தாலும், அவர்கள் அநீதமிழைத்து, தீங்கிழைக்கின்றனர். அவர்களை மன்னித்துவிட்டாலும், அவர்கள் மோசமான சொல், செயற்கள் ஊடாக மடமைத்தனமாக நடந்துகொள்கின்றனர். இவ்வாறிருக்க தொடர்ந்தும் அவர்களை சேர்ந்து நடப்பதா? எனக் கேட்டார். அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: நீ கூறுகின்றது போலவே உண்மையில் நடந்திருந்தால், நீ அவர்களுக்கு இழிவையே கொடுக்கின்றாய். நீ நிறைய நல்லுபகாரம் புரிந்தும், அவர்கள் அசிங்கமாக நடந்து கொள்வதால், நீ அவர்களுக்கு சூடான சாம்பலைக் கொடுப்பது போன்று தான் இது உள்ளது. அவர்களுக்கெதிராக உனக்கு உதவி செய்யும் ஒருவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இருந்து கொண்டே இருப்பார். நீ தொடர்ந்து அவர்களுக்கு உபகாரம் செய்து கொண்டும், அவர்கள் உனக்கு அநீதமிழைத்துக் கொண்டும் இருக்கும் காலமெல்லாம் அவர் உன்னை விட்டும் தீங்குகளைத் தடுப்பார்.

فوائد الحديث

அநியாயத்தை பெருந்தன்மையைக் கொண்டு எதிர்கொள்வது, அநீதமிழைப்பவன் சத்தியத்திற்குத் திரும்புவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்குமிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார்.

தீங்குகள் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் கட்டளையை விடாமல் நிறைவேற்றுவது ஒரு முஃமினான அடியானுக்கு அல்லாஹ் உதவிசெய்யக் காரணமாகும்.

உறவுகளைத் துண்டித்து நடப்பது இவ்வுலகில் வலியையும், வேதனையையும் தருவதோடு மறுமையில் பாவத்தையும், விசாரணையையும் கொண்டுவரும்.

ஒரு முஸ்லிம் தனது நற்கருமங்களை நன்மையை நாடிச் செய்யவேண்டும். மக்கள் துண்டித்து நடப்பதோ, அல்லது நோவினை செய்வதோ அவரது நல்ல பழக்கத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது.

உண்மையில் உறவுகளைச் சேர்ந்து நடப்பவன், பிரதியுபகாரமாகத் தன் உறவுகளைச் சேர்ந்து நடப்பவன் அல்ல. தனது உறவுகள் துண்டித்து நடந்தாலும் சேர்ந்து நடப்பவனே உண்மையில் உறவுகளைச் சேர்ந்து நடப்பவன்.

التصنيفات

குடும்ப உறவைச் சேர்ந்து நடப்பதன் சிறப்பு