'நீங்கள் திரும்பிச் சென்று, மீண்டும் தொழுங்கள். நீங்கள் (சரியாகத்) தொழவில்லை.'

'நீங்கள் திரும்பிச் சென்று, மீண்டும் தொழுங்கள். நீங்கள் (சரியாகத்) தொழவில்லை.'

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலினுள் நுழைந்தார்கள். அப்போது ஒரு மனிதர் நுழைந்து, தொழுது விட்டு, நபியவர்களுக்கு ஸலாம் கூறினார். அப்போது நபியவர்கள் அவரது ஸலாமுக்கு பதில் அளித்து விட்டு, 'நீங்கள் திரும்பிச் சென்று, மீண்டும் தொழுங்கள். நீங்கள் (சரியாகத்) தொழவில்லை.' என்று கூறியனுப்பினார்கள். அந்த மனிதரும் திரும்பிச் சென்று, ஏற்கனவே தொழுதது போன்று மீண்டும் தொழுதார். பின்பும் நபியவர்களிடம் வந்து ஸலாம் கூறியதும் நபியவர்கள் பதில் கூறிவிட்டு, (மீண்டும்) 'நீங்கள் திரும்பிச் சென்று, மீண்டும் தொழுங்கள். நீங்கள் (சரியாகத்) தொழவில்லை.' என்று கூறியனுப்பினார்கள். (இவ்வாறு) மூன்று தடவை நிகழ்ந்த பின்னர் அம்மனிதர், 'உம்மை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவனாகிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதனை விட அழகாக என்னால் தொழமுடியாது. எனக்குக் கற்றுத் தாருங்கள்' என்று கூறினார். அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : "நீங்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால், தக்பீர் கூறிவிட்டு, பின்பு உங்களால் இலகுவாக ஓதமுடியுமான சில அல்குர்அன் வசனங்களை ஓதுங்கள். பின்பு ருகூஉ செய்து, அமைதியடையும் வரை ருகூஇலேயே இருங்கள். பின்பு எழுந்து நேரான நிலைக்கு வாருங்கள். பின்பு ஸுஜூத் செய்து, அமைதியடையும் வரை ஸுஜூதிலேயே இருங்கள். பின்னர் எழுந்து, அமைதியடையும் வரை அமர்ந்து கொண்டிருங்கள். இவ்வாறே உங்களது முழுத் தொழுகையிலும் செய்யுங்கள்'.

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலினுள் நுழைந்தார்கள். அப்போது ஒரு மனிதர் பள்ளிவாசலில் நுழைந்து, இரண்டு ரக்அத்களை, நிலை, ருகூஉ மற்றும் ஸுஜூத் என எதிலும் ஆறுதலாக இருக்காமல் வேகமாகத் தொழுது முடித்தார்கள். அவர் தொழுவதை நபியவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் அம்மனிதர் பள்ளியில் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டிருந்த நபியவர்களிடம் வந்து ஸலாம் கூறினார். நபியவர்களும் அவரது ஸலாமுக்கு பதில் அளித்துவிட்டு, பின்வருமாறு கூறினார்கள் : நீங்கள் திரும்பிச் சென்று, உங்களது தொழுகையை மீளவும் தொழுங்கள். ஏனெனில் நீங்கள் தொழவே இல்லை. அவர் மீண்டும் திரும்பிச் சென்று, ஏற்கனவே தொழுதது போன்றே மீண்டும் வேகமாகத் தொழுது விட்டு, நபியவர்களிடம் வந்து, அவர்கள் மீது ஸலாம் கூறினார். அப்போதும் நபியவர்கள், நீங்கள் திரும்பிச் சென்று, உங்களது தொழுகையை மீளவும் தொழுங்கள். ஏனெனில் நீங்கள் தொழவே இல்லை என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை செய்தார்கள். அப்போது அம்மனிதர், 'உங்களை சத்தியத்தைக் கொடுத்து அனுப்பிய அல்லாஹ்வின் சத்தியமாக! இதைவிட அழகாக என்னால் தொழமுடியாது. நீங்கள் எனக்குக் கற்றுத் தாருங்கள்' என்று கூறினார். அப்போது நபியவர்கள் அவரைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள் : நீங்கள் தொழுகைக்காக நின்றால், முதலில் தக்பீரதுல் இஹ்ராமைக் கூறுங்கள். பின்பு ஸூரா அல்பாதிஹாவையும், அல்லாஹ் நாடிய அளவு வேறு வசனங்களையும் ஓதுங்கள். பின்பு ருகூஉ செய்து, அந்த ருகூஇல் அமைதியடையும் வரை இருங்கள். அதாவது, உங்கள் இரு உள்ளங்கைகளையும் உங்கள் முழங்காலில் வைத்து, உங்களது முதுகை சமாந்திரமாக வைத்து, சரியான முறையில் ருகூவை செய்வீராக. பின்பு, எழுந்து, எழும்புகள் அதன் மூட்டுக்களை நோக்கி மீளும் அளவுக்கு உங்களது முதுகந்தண்டை நேராக வைத்து, சரியாக நேராக நிற்பீராக. பின்பு ஸுஜூது செய்து அதில் அமைதியாக இருப்பீராக. அதாவது, மூக்குடன் நெற்றியையும், இரு உள்ளங்கைகளையும், முழங்கால்களையும், பாதங்களின் விரல் ஓரங்களையும் நிலத்தில் பட வைப்பீராக! பின்பு எழுந்து, இரு ஸுஜூதுகளுக்கு மத்தியில் அமைதியாக அமர்வீராக! பின்பு இவ்வாறே உங்களது ஒவ்வொரு ரக்அத்திலும் செய்வீராக.

فوائد الحديث

தொழுகையில் இந்த அடிப்படை அம்சங்கள், மறதியின் காரணமாகவோ, அறியாமையின் காரணமாகவோ மன்னிக்கப்படமாட்டாது. ஏனெனில், நபியவர்கள் இம்மனிதருக்குக் கற்றுக் கொடுத்தது மாத்திரமல்லாமல், மீண்டும் தொழவும் வைத்தார்கள்.

துமஃனீனா எனும், ஆறுதலாக இருத்தல், தொழுகையின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும்.

இமாம் நவவீ (ரஹ்) கூறுகின்றார்கள் : தொழுகையின் கடமைகளில் ஏதாவதொன்றில் ஒருவர் குறைவைத்தாலும், அவரது தொழுகை நிறைவேற மாட்டாது என்பதை இது அறிவிக்கின்றது.

இமாம் நவவீ (ரஹ்) கூறுகின்றார்கள் : கற்பவர், அறியாதவர் ஆகியோருடன் மென்மையாகவும், மிருதுவாகவும் நடந்து கொள்ளல், சட்டத்தை அவருக்குத் தெளிவுபடுத்தல், நோக்கங்களை அவருக்கு சுருக்கமாக விளக்குதல், அவர் செய்ய வேண்டிய விடயங்களில் முக்கியமானதை மற்றும் கற்றுக் கொடுப்பதுடன், அவரது அந்த நிலையில் நினைவில் வைத்திருக்கவோ, செய்யவோ முடியாத மேலதிகமான விடயங்களை கற்றுக்கொடுக்காமல் இருத்தல் என்பவற்றையும் இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது.

இமாம் நவவீ (ரஹ்) கூறுகின்றார்கள் : பத்வா வழங்கும் ஒரு முப்தியிடம் ஒரு விவகாரம் பற்றிக் கேற்கப்பட்டு, அம்மனிதர் கேட்காத தேவையான வேறு விடயங்களும் இருக்கும் பட்சத்தில், அதையும் கூறுவது நல்லது என்பதை இது உணர்த்துகின்றது. இது நன்மை நாடுவதாக இருக்குமே தவிர, அநாவசியமான பேச்சாக இருக்கமாட்டாது.

தனது குறையை ஏற்றுக்கொள்ளல். ஏனெனில், அம்மனிதர், 'இதைவிட என்னால் அழகாகத் தொழ முடியாது' எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று கூறினார்.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல், கற்பவர் அறிஞரிடம் தனக்குக் கற்பித்துத் தருமாறு கேட்டல் போன்ற பயன்களையும் இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது.

சந்திக்கும் போது ஸலாம் கூறுவது விரும்பத்தக்கதாகவும், அதற்கு பதில் அளிப்பது கடமையாகவும் உள்ளமை. குறுகிய இடைவெளியில் மீண்டும் சந்தித்தாலும் மீண்டும் ஸலாம் கூறுவது விரும்பத்தக்கதாகும். அவ்வாறு கூறும் ஒவ்வொரு தடவையும், பதில் அளிப்பது கட்டாயமாகும்.

التصنيفات

தொழும் முறை