யார், 'பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் பில் அர்ழி வலா பிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம் (எவனுடைய பெயர்…

யார், 'பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் பில் அர்ழி வலா பிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம் (எவனுடைய பெயர் இருக்கும் போது, இவ்வானத்திலோ, பூமியிலோ எந்தவொன்றும் தீங்கை ஏற்படுத்தமாட்டாதோ, அந்த அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (காலையை, மாலையை அடைகின்றேன்) அவன் செவிமடுப்பவனாகவும், அறிந்துள்ளவனாகவும் இருக்கின்றான்) என்று மூன்று தடவை கூறுகின்றாரோ, அவர் காலையை அடையும் வரை, அவருக்கு எந்த திடீர் சோதனைகளும் ஏற்படமாட்டாது

அபான் இப்னு உஸ்மான் அவர்கள் கூறுகின்றார்கள் : உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூற, தான் கேட்டுள்ளதாக அறிவிக்கின்றார்கள்: "யார், 'பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் பில் அர்ழி வலா பிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம் (எவனுடைய பெயர் இருக்கும் போது, இவ்வானத்திலோ, பூமியிலோ எந்தவொன்றும் தீங்கை ஏற்படுத்தமாட்டாதோ, அந்த அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (காலையை, மாலையை அடைகின்றேன்) அவன் செவிமடுப்பவனாகவும், அறிந்துள்ளவனாகவும் இருக்கின்றான்) என்று மூன்று தடவை கூறுகின்றாரோ, அவர் காலையை அடையும் வரை, அவருக்கு எந்த திடீர் சோதனைகளும் ஏற்படமாட்டாது. யார் காலையை அடையும் போது அவ்வாறு கூறுகின்றாரோ, அவர் மாலையை அடையும் வரை எந்தத் திடீர் சோதனைகளும் ஏற்படமாட்டாது." அபான் இப்னு உஸ்மானுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இந்த ஹதீஸை அவரிடமிருந்து கற்ற மனிதர் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள், 'ஏன் என்னைப் பார்க்கின்றீர்கள்?' அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. எனினும், எனக்கு இந்த நோய் ஏற்பட்ட தினம், நான் கோபத்தில் இருந்ததால், எனக்கு இதைக் கூற மறந்துவிட்டது.' என்று கூறினார்கள்.

[சரியானது] [இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, குப்ரா எனும் நூலில் இாம் நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்]

الشرح

இங்கு நபியவர்கள், ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியன் உதிக்க முன்னரும், ஒவ்வொரு நாள் மாலையிலும் சூரியன் மறைய முன்னரும் மூன்று தடவைகள் இந்த துஆவை ஓதுவதன் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்துகின்றார்கள். எவனுடைய பெயர் இருக்கும் போது(அதாவது, கூறப்படும் போது), இவ்வானத்திலோ,(மேலும் அதில் இருந்து இறங்கும் சோதனைகளோ) பூமியிலோ (மேலும் அதில் இருந்து வெளிப்படும்) சோதனைகளோ) எந்தவொன்றும் (அது எவ்வளவு பெரியதாக இருப்பினும்) தீங்கை ஏற்படுத்த மாட்டாதோ, அந்த அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (காலையை, மாலையை) அடைகின்றேன் (அவனைக்கொண்டே அனைத்துத் தீங்குகளை விட்டும் பாதுகாப்பும் தேடுகின்றேன்) அவன் (எமது வார்த்தைகளைக்) கேட்பவனாகவும் (எமது நிலைமைகளை) அறிந்தவனாகவும் உள்ளான். யார் மாலையை அடையும் போது இவ்வாறு கூறுகின்றாரோ, அவர் காலையை அடையும் வரை திடீர் சோதனைகள் எதுவும் அவருக்கு ஏற்படமாட்டாது. யார் காலையை அடையும் போது இவ்வாறு கூறுகின்றாரோ, அவர் மாலையை அடையும் வரை திடீர் சோதனைகள் எதுவும் அவருக்கு ஏற்படமாட்டாது. இந்த ஹதீஸை அறிவிக்கும் அபான் இப்னு உஸ்மான் (ரஹ்) அவர்களுக்கு பக்கவாதம் (அதாவது, உடம்பின் ஒரு பாதி செயலிழந்து போதல்) ஏற்பட்டிருந்தது. எனவே, அவரிடம் இந்த ஹதீஸைக் கற்ற மனிதர் ஆச்சரியமாக அவரைப் பார்த்தார். அப்போது அவர் அந்த மனிதரைப் பார்த்து, 'ஏன் என்னைப் பார்க்கின்றீர்கள்?' அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. எனினும், எனக்கு இந்த நோய் ஏற்பட்ட தினம், நான் அதை ஓதவேண்டும் என அல்லாஹ் விதித்திருக்கவில்லை. எனவே, எனக்கு ஒரு கோபம் ஏற்பட்டபோது, நான் மேற்குறிப்பிட்ட இந்த வசனங்களைக் கூற மறந்துவிட்டேன்.' என்று கூறினார்கள்.

فوائد الحديث

காலையிலும், மாலையிலும் இந்த துஆவை ஓதுவது விரும்பத்தக்கதாகும். அதன் பயனாக, அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரம் அம்மனிதன், திடீர் சோதனைகள், பாதிப்புக்கள் போன்றவை ஏற்படுவதை விட்டும் பாதுகாக்கப்படுவான்.

ஆரம்பகால ஸலபுகள் அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையும், நபியவர்கள் கூறியவற்றை அவர்கள் உண்மைப்படுத்தியமையும்.

திக்ர்கள் காலை, மாலை நேரங்களுக்கும் குறித்துக் கூறப்பட்டிருப்பதன் பயன்களில் ஒன்று, ஒரு முஸ்லிமிடம் பராமுகம் ஏற்படாமல் பாதுகாத்து, தான் அல்லாஹ்வின் அடியான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவைப்பதாகும்.

அல்லாஹ்வை நினைவுகூறுபவரின் இறைநம்பிக்கை, உள்ளச்சம், விழிப்புநிலை, உளத்தூய்மை மற்றும் மனவுறுதி என்பவற்றுக்கு ஏற்ப, அந்த திக்ரின் தாக்கமும் உறுதியாக இருக்கும்.

التصنيفات

காலை மாலை திக்ருகள்