தங்கம் மற்றும் வெள்ளியை வைத்துக் கொண்டிருக்கும் யாராக இருப்பினும், அதில் நிறைவேற்றவேண்டிய கடமைகளை…

தங்கம் மற்றும் வெள்ளியை வைத்துக் கொண்டிருக்கும் யாராக இருப்பினும், அதில் நிறைவேற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றா விட்டால், நெருப்பினால் ஆன இரும்புப் பாளங்கள் அவருக்காக உருவாக்கப்பட்டு, அவை நரக நெருப்பில் சூடு காட்டப்படும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: தங்கம் மற்றும் வெள்ளியை வைத்துக் கொண்டிருக்கும் யாராக இருப்பினும், அதில் நிறைவேற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றா விட்டால், நெருப்பினால் ஆன இரும்புப் பாளங்கள் அவருக்காக உருவாக்கப்பட்டு, அவை நரக நெருப்பில் சூடு காட்டப்படும். பின்பு, அதைக் கொண்டு அவரது விலாப்புறத்திலும், நெற்றியிலும், முதுகிலும் சூடு போடப்படும். சூடு தனியும் போதெல்லாம் மீண்டும் சூடு போடப்படும். ஐம்பதாயிரம் வருட அளவைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும், அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கப்படும் வரை இவ்வாறு செய்யப்படும். அதன் பின்னர் தான், தனது பாதை ஒன்றில் சுவர்க்கம் என்றோ, நரகம் என்றோ கண்டுகொள்வார்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இங்கு நபியவர்கள் சில குறிப்பிட்ட வகையான சொத்துக்களையும், அவற்றின் ஸகாத்தை வழங்காதவர்களுக்கு மறுமையில் உள்ள தண்டனைகளையும் தெளிவுபடுத்துகின்றார்கள். உதாரணமாக, முதலாவது: தங்கம், வெள்ளி மற்றும் அவற்றின் சட்டத்தில் உள்ள, பணம் மற்றும் வியாபாரப் பொருட்கள் இவற்றில் ஸகாத் கடமையாகியிருந்தும், கொடுக்கப்படவில்லை என்றால், மறுமைநாளில் அவை உருக்கப்பட்டு, பாளங்களாக வார்க்கப்படும். மேலும், நரக நெருப்பில் அவை சூடாக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர் அதைக் கொண்டு வேதனை செய்யப்படுவார். அவரது விழாப்புறங்களும், நெற்றியும், முதுகும் அவற்றால் சூடு போடப்படும். அதன் சூடு குறைந்தவுடன், மீண்டும் சூடாக்கப்படும். இதே நிலைமையில், மறுமை நாள் முழுதும், அதாவது ஐம்பதாயிரம் வருடங்கள் கொண்ட காலப்பகுதி முழுவதும் அவர் இருப்பார். அதற்குப் பின்னர் அவரது விடயத்தில் அல்லாஹ் தீர்ப்பு வழங்கியதும், அவர் சுவனவாதியாகவோ, நரகவாதியாகவோ இருப்பார். இரண்டாவது: ஒட்டகங்களை வைத்துக்கொண்டு, அதில் கட்டாயமான கடமைகளையும், ஸகாத்தையும் கொடுக்காதவர். – ஒட்டகங்களில் பால் கறக்கும் போது அவ்விடத்திற்கு வரும் ஏழைகளுக்கக் கொடுப்பதும் அதில் உள்ள கடமைகளில் ஒன்றாகும் - இந்த ஒட்டகங்கள், கொழுத்துப் பிரமாண்டமாக இருக்கும் நிலையில் அதிக எண்ணிக்கைகளுடன் கொண்டுவரப்படும். அதன் உரிமையாளர் சமாந்திரமான, விசாலமான நிலத்தில் முகங்குப்புற போடப்பட்டதும், அந்த ஒட்டகங்கள் இவரைத் தம் கால்களால் மிதித்து, பற்களால் கடிக்கும். இறுதியான ஒட்டகம் சென்றவுடன் மீண்டும் முதலாவது ஒட்டகம் அனுப்பப்படும். இதே நிலைமையில், மறுமை நாள் முழுதும், அதாவது ஐம்பதாயிரம் வருடங்கள் கொண்ட காலப்பகுதி முழுவதும் அவர் இருப்பார். அதற்குப் பின்னர் அவரது விடயத்தில் அல்லாஹ் தீர்ப்பு வழங்கியதும், அவர் சுவனவாதியாகவோ, நரகவாதியாகவோ இருப்பார். மூன்றாவது: மாடு, (செம்மறி மற்றும் சாதாரண) ஆடுகளை வைத்துக்கொண்டு, அதில் கடமையான ஸகாத்தை நிறைவேற்றாத உரிமையாளர். அவையனைத்தும், ஒன்றும் குறைவடையாமல் முழுமையாகக் கொண்டுவரப்படும். அதன் உரிமையாளர் சமாந்திரமான, விசாலமான நிலத்தில் முகங்குப்புற போடப்படுவார். அந்த ஆடுகளில் கொம்புகள் வளைந்தவையோ, கொம்புகள் அற்றவையோ, கொம்புகள் உடைக்கப்பட்டவையோ இருக்கமாட்டாது. மாறாக, அவை பரிபூரண நிலையில் வந்து, தமது கொம்புகளால் அவனைக் குத்தும். தமது கால்களால் அவனை மிதிக்கும். அவற்றில் இறுதியானது சென்றவுடன் மீண்டும் முதலாவது அனுப்பப்படும். இதே நிலைமையில், மறுமை நாள் முழுதும், அதாவது ஐம்பதாயிரம் வருடங்கள் கொண்ட காலப்பகுதி முழுவதும் அவர் இருப்பார். அதற்குப் பின்னர் அவரது விடயத்தில் அல்லாஹ் தீர்ப்பு வழங்கியதும், அவர் சுவனவாதியாகவோ, நரகவாதியாகவோ இருப்பார். நான்காவது : குதிரையை வைத்துக் கொண்டிருப்பவர். இவர்கள் மூன்று தரப்பினர். முதல் தரப்பினர் : அது அவருக்கு குற்றமாக இருக்கும். அது யாரென்றால், அவற்றை முகஸ்துதிக்காகவும், பெருமைக்காகவும், முஸ்லிம்களுக்கெதிராக யுத்தம் செய்வதற்காகவும் வைத்துக்கொண்டிருப்பவர். இரண்டாவது தரப்பினர் : அது அவருக்கு ஒரு திரையாக இருக்கும். அது யாரென்றால், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக அதை வைத்துக்கொண்டிருப்பவர். அவர் அதற்கு நல் உபகாரம் புரிந்து, அதற்கு உணவு வழங்கி, அதன் தேவைகளை நிறைவேற்றியவர். அதனை ஆண் குதிரையுடன் இணையவிடுவதும் அவற்றில் ஒன்றாகும். மூன்றாவது தரப்பினர் : அது அவர்களுக்குக் கூலியாக அமையும். அது யாரென்றால், அதனை அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வதற்காக முஸ்லிம்களுக்காக வைத்துக்கொண்டிருப்பவர். அது மேய்ந்துகொண்டிருப்பதற்காக பசுந்தரைகளிலும், தோட்டங்களிலும் இருக்கும். அதன் விட்டைகள் மற்றும் சிறுநீர்களின் அளவுக்கு ஏற்ப அவருக்கு நன்மைகளும் எழுதப்படும். அது, அதனைக் கட்டிவைக்கப்பட்டுள்ள கயிற்றை அவிழ்த்துக்கொண்டு, மேடுகளுக்கு ஓடிச் சென்று வந்தாலும், அதன் எட்டுக்கள் மற்றும் விட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அல்லாஹ் நன்மைகளை எழுதுவான். அதன் உரிமையாளர் ஓர் ஆற்றங்கரைக்கு அதனை அழைத்துச் சென்று அங்கு அவர் நீர் புகட்ட நாடாமல், அதுவாக நீர் அருந்தினாலும் அது அருந்தும் அளவுக்கு ஏற்ப அவருக்கு நன்மைகள் எழுதப்படும். பின்பு நபியவர்களிடம், கழுதைகள் பற்றி, அதாவது, அவையும் குதிரையைப் போன்றனவா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : அதற்கென்று தனியான சட்டமொன்றை அல்லாஹ் இறக்கவில்லை. பின்வரும் தன்னிகரற்ற வசனத்தைத் தவிர. இவ்வசனம் அனைத்துவிதமான நன்மைகள் மற்றும் பாவங்களுக்கும் பொதுவானது. அந்த வசனமாவது: "எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்." (ஸூரா ஸில்ஸால் : 8) எனவே, யார் கழுதைகளை வைத்துக்கொண்டு நன்மை செய்கின்றாரோ, அவர் அதற்கான கூலியைக் கண்டுகொள்வார். யார் அவற்றை வைத்துக்கொண்டு பாவங்களில் ஈடுபடுகின்றாரோ அதற்கான தண்டனையைக் கண்டுகொள்வார். இது எல்லா செயற்களையும் உள்ளடக்கிக் கொள்ளக் கூடியது.

فوائد الحديث

ஸகாத்தைக் கொடுப்பது கட்டாயமாக இருப்பதும், கொடுக்காமல் இருப்பதற்கான கடுமையான எச்சரிக்கையும்.

சோம்பலின் காரணமாக ஸகாத்தைக் கொடுக்காமல் இருப்பவர் காபிர் அல்ல. எனினும், அவர் பாரிய ஆபத்தில் உள்ளார்.

ஒரு மனிதன் ஒரு நற்கருமத்தை செய்யும் போது, பிரதான நற்கருமத்தை அவன் நாடிச் செய்திருந்தால், அதனுள் நிகழும் மேலதிகமான அம்சங்களுக்கும் அவனுக்கு நன்மை கிடைக்கும். அந்த மேலதிகமான அம்சங்களை அவன் நாடிச் செய்யாவிட்டாலும் சரியே,

சொத்துக்களில், ஸகாத்தைத் தவிர, வேறு சில கடமைகளும் உண்டு.

ஒட்டகம் நீர் அருந்தச் செல்லும் இடத்திற்கு வருகை தந்துள்ள ஏழைகளுக்கு அதிலிருந்து பால் கரந்துகொடுப்பதும், அவ்வொட்டகத்தில் நிறைவேற்றவேண்டிய கடமைகளில் ஒன்றாகும். தேவையுள்ளவர் வீடு தேடிவருவதை விட அது இலகுவானதாக இருக்கும். அம்மிருகத்திற்கும் அது இலகுவாக இருக்கும். இப்னு பத்தால் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : குறிப்பான கடமை மற்றும் ஏனைய கடமைகள் என சொத்துக்களில் இரு விதமான கடமைகள் உள்ளன. பால் கறத்தல் என்பது, நற்குணங்கள் சார்ந்த கடமைகளில் ஒன்றாகும்.

ஒட்டகம், மாடுகள் மற்றம் ஆடுகள் விடயத்தில் உள்ள கடமைகளில் ஒன்று, தேவையேற்படும் போது, அவற்றின் ஆண் மிருகங்களுடன் அவற்றை இணைத்து விடுவதாகும்.

கழுதைகள் மற்றும் குறிப்பாகக் கூறப்படாத ஏனையவற்றின் சட்டங்கள் "எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்." (ஸூரா ஸில்ஸால் : 8) என்ற வசனத்திற்குள் வரக் கூடியதாகும்.

இவ்வசனம், நன்மைகள் - குறைவாக இருப்பினும் - செய்யுமாறு ஆர்வமூட்டுவதுடன், பாவங்கள் - அற்பமாக இருப்பினும் - தவிர்க்குமாறு எச்சரிக்கின்றது.

التصنيفات

மறுமை வாழ்வு, ஸகாதின் அவசியமும் அதனை விட்டுவிடுபவருக்கான சட்டமும், வக்ப் செய்தல்