நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கிடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள்.…

நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கிடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள்

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கிடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள்.

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளில் இரண்டு கொம்புள்ள வெள்ளையும் கறுப்பு நிறமும் கலந்த செம்மறியாடுகளை அறுத்தார்கள். அப்போது 'பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்' என்று கூறினார்கள். அதனை அறுக்கும் போது அதன் கழுத்தில் தனது காலை வைத்தார்கள் என்று அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

உழ்ஹிய்யா முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்து ஏற்றுக்கொண்ட ஒரு மார்க்கக் கடமை என்பதை இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.

பலியிடப்படும் விலங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களால் பலியிடப்பட்ட விலங்கு போலவே இருப்பது நல்லது. ஏனென்றால் அவர்களால் பலியிட்ட ஆடுகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தன, சுவையான இறைச்சியையும் கொழுப்பையும் கொண்டிருந்தன.

இமாம் நவவி கூறுகிறார்: இந்த ஹதீஸின் அடிப்படையில், ஒருவர் உழ்ஹிய்யாவை நியாயமான காரணமேதுமின்றி வேறு ஒருவரிடம் அறுப்பதற்கு ஒப்படைக்காது, தாமாகவே அறுப்பது விரும்பத்தக்கது. அவ்வாறு இன்னொருவிடம் ஒப்படைத்தால் அவர் அந்த இடத்தில் இருப்பது விரும்பத்தக்கது. ஒரு முஸ்லிமின் சார்பாக உழ்ஹிய்யாவை அறுக்க மற்றொரு முஸ்லிமை நியமிப்பது அனுமதிக்கப்படுகிறது, இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார்: இந்த ஹதீஸ், பிஸ்மியுடன் 'அல்லாஹு அக்பர்' என்று கூறுதல், விலங்கின் கழுத்தின் மீது வலது பக்கத்தில் காலை வைத்தல் விரும்பத்தக்க விடயம் என்பதைக் காட்டுகிறது. விலங்கை அதன் இடது பக்கத்தில் படுக்க வைத்து, ஒருவரின் காலை அதன் வலது பக்கத்தில் வைக்க வேண்டும் என்பதில் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர், இதனால் அறுப்பவர் தனது வலது கையால் கத்தியைப் பிடித்து இடது கையால் கழுத்தைப் பிடிப்பது எளிதாக இருக்கும்.

கொம்புகள் உள்ள விலங்கை பலியிடுவது விரும்பத்தக்கது (ஸுன்னாவாகும்). கொம்புகள் இல்லாத ஆட்டை பலியிடுவதும் அனுமதிக்கப்படுகிறது.

التصنيفات

அறுத்தல், உள்ஹிய்யா