(அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்றுதிரட்டுவான்.…

(அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்றுதிரட்டுவான். அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதை அவர்கள் செவியுற முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்துசேரும்

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது (சமைக்கப் பட்ட) முன்கால் ஒன்று அவர்களிடம் வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. (அதை) நபி (ஸல்) அவர்கள் தம் பற்களால் கடித்து அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு கூறினார்கள்: நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். எதன் காரணமாக என்று உங்களுக்குத் தெரியுமா? (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்றுதிரட்டுவான். அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதை அவர்கள் செவியுற முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்துசேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறுசிலரை நோக்கி) 'உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்க மாட்டீர்களா?' என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறுசிலரிடம், '(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர். ஆகவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, 'நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும் படி உத்தர விட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம்பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப)நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், '(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் இன்று (கடும்) கோபம் கொண்டிருக்கிறான். இதற்குமுன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது' என்று கூறிவிட்டு, 'நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று, 'நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதலாவது (முக்கிய) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான்.7 எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்குமுன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போல் விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் பயன்படுத்தி விட்டேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!' என்று கூறிவிட்டு, 'நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள்' என்பார்கள். (அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று,) 'இப்ராஹீமே! நீங்கள் இறைத் தூதரும் பூமியில் வசிப்பவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (கடுங்)கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன். -அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அவ்வாறே மக்களும் மூஸா (அலை) அவர்களிடம் சென்று, 'மூஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தனது தூதுத்துவத்தை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தி யுள்ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கூறுவார்கள். அதற்கு மூஸா (அலை) அவர்கள், 'இன்று என் இறைவன் (என்மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப்போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அவ்வாறே மக்கள் ஈஸா (அலை) அவர்களிடம் சென்று, 'ஈஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் குழந்தையாய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங் கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஈஸா (அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (என்மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை.- (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல்- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அப்போது மக்கள் என்னிடம் வந்து 'முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களது முன், பின் பாவங்களை இறைவன் மன்னித்துவிட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியணைக்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) ஸஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்குமுன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு, 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி, 'இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்' என்பேன். அதற்கு 'முஹம்மதே! சொர்க்கத்தின் வாயில்களில் வலப் பக்க வாயில் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாயில்களிலும் மக்களுடன் இணைந்து நுழையலாம்' என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்க வாயிலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் 'மக்காவிற்கும் (யமனிலுள்ள) 'ஹிம்யர்' எனும் ஊருக்கும் இடையிலுள்ள' அல்லது 'மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள' தூரமாகும்.

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தமது தோழர்களுடன் ஒரு விருந்துபசாரத்தில் இருந்தார்கள். அப்போது (சமைக்கப்பட்ட) ஆட்டின் முன்கால் ஒன்று அவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டது. அதன் இறைச்சி அவர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. (அதை) நபி (ஸல்) அவர்கள் தம் பற்களால் கடித்து அதிலிருந்து சிறிது உண்டார்கள். பின்னர் நபியவர்கள் அவர்களிடம் பேசினார்கள். அல்லாஹ் தன்மீது புரிந்துள்ள அருளை வெளிப்படுத்திக் கூறும் முகமாக 'நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். என்று குறிப்பிட்டார்கள். தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில், பின்னர் அவர் கூறினார்: 'எதன் காரணமாக என்று உங்களுக்குத் தெரியுமா?' மறுமை நாளில் மக்கள் அனைவரும் விசாலமான, சமதரையான, மிகவும் நீண்ட ஒரே தளத்தில் ஒன்றுகூடச் சேர்க்கப் படுவார்கள். அங்கே இருப்பவர்கள் அனைவரும் அழைப்பவரின் குரலை தெளிவாகக் கேட்பார்கள்; பார்ப்பவரின் பார்வையிலிருந்து யாரும் மறைய முடியாது. நிலம் சமமாக இருப்பதால், யாரும் ஒளிந்து கொள்ள ஏதுவான இடமில்லை. பார்வை அனைவரையும் எட்டும். ஒருவர் பேசினால், அங்கே இருக்கும் கடைசி மனிதருக்குக் கூட அது கேட்கும். பார்வையும் அனைவரையும் அடையும். அப்போது சூரியன் படைப்புகளுக்கு ஒரு 'மீல்' அளவிற்கு நெருங்கிவரும். அதாவது சுர்மா பூசுவதற்கு பயன்படுத்தப்படும் குச்சியின் நீலத்திற்கு அளவாக மிக நெருக்கமாக சூரியன் கொண்டுவரப்படும். அதன் காரணமாக மக்கள் சகிக்க முடியாத அளவிற்கு துயரத்தையும் கவலையையும் துன்பத்தையும் அனுபவிப்பார்கள். அதனால் அவர்கள் விடுதலை பெறுவதற்காக தமக்கு ஷஃபாஅத் (பரிந்துரை) செய்வோரைத் தேடுவார்கள், அப்போது அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு, மனிதகுலத்தின் தந்தையான ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்ல வேண்டும் என்ற உள்ளுணர்வை ஏற்படுத்துவான். அவர்கள் ஆதம் நபியிடம் சென்று, அவர்களின் சிறப்புகளைச் கூறி, 'நீங்கள் மனிதர்களின் தந்தை. அல்லாஹ் உங்களைத் தனது கையால் படைத்தான்; மலக்குகளை உங்களுக்கு முன் ஸஜ்தா செய்ய வைத்தான்; எல்லா பொருள்களின் பெயர்களையும் உங்களுக்கு கற்றுக்கொடுத்தான்; உங்களுள் அவனது உயிரை ஊதினான். ஆகவே, எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுங்கள்' என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், 'இன்று என் இறைவன் என்றுமே இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை; இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான்' என்று கூறுவார். பின்னர், அல்லாஹ் தடை செய்த மரத்திலிருந்து தாம் உண்ட தவறை நினைவு கூர்வார். அவர் தொடர்ந்தும் 'இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள். நூஹ் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள் எனக் கூறுவார்: அவர்கள் பின்னர் நூஹ் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் சென்று, 'நீங்கள் இந்தப் பூமியில் மக்களிடம் அல்லாஹ் அனுப்பிய முதல் தூதர் ஆவிர். மேலும் அல்லாஹ் உங்களை 'நன்றியுள்ள அடியார்' என்று புகழ்ந்து அழைத்தான். ஆகவே எங்களுக்காக பரிந்துரை செய்யுங்கள்' என்று கேட்பார்கள் ஆனால் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பதிலளிப்பார்கள்: 'இன்று என் இறைவன் இதுவரை இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை; இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான். அவன் எனது சமூகத்திற்காக ஒரு பிரத்தியேகமான துஆவை தந்தான் நான் அதனை என் சமூகத்தின்மேல் அழிவை வேண்டி செய்தேன். இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள்; இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள்'. அவர்கள் பின்னர் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் சென்று, 'நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் நெருங்கிய நண்பர் (கலீல்). எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று நீங்கள் காணவில்லையா?' என்று கேட்பார்கள்;. அதற்கு இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் கூறுவார்கள் இன்று என் இறைவன் இதுவரை இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான். நான் மூன்று இடங்களில் (உண்மைக்கு எதிராக) பொய் கூறியுள்ளேன்'. அவை: 'நான் உடல்நலக்குறைவாக இருக்கிறேன்' என்று கூறியது. 'இந்தச் செயலை அதாவது சிலையை உடைத்த செயலை இச்சிலைகளில் பெரியது செய்தது' என்று கூறியது. மேலும், தனது மனைவி ஸாராவிடம், நம்ரூதின் தீங்கிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக 'அவனிடம் நான் உன் சகோதரன் என்று கூறு' என்று சொல்லியது. உண்மையில், அந்த மூன்று வார்த்தைகளும் நேரடி பொய்கள். அல்ல அவை மறைபொருள் கொண்ட பேச்சுகள் (மஆரீழ்) ஆகும். ஆனால் அவை வெளிப்படையாகப் பார்க்கும்போது பொய்யைப் போல தோன்றியதால், இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் தம்மை மிகச் சிறியவராக எண்ணி, ஷஃபாஅத் (பரிந்துரை) செய்யத் தயங்கினார்கள். இருந்தாலும், அல்லாஹ்வை அதிகமாக அறிந்தவராகவும், அவனிடம் நெருக்கமான உயர்ந்த அந்தஸ்தினைப் பெற்றவராகவும், அவனை அதிகம் அஞ்சி நடக்கக் கூடியவராகவும இருந்தார். அவ்வாறிருந்தும் அவர்: 'இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள்; மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள் என்று கூறினார். அவர்கள் பின்னர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் சென்று 'மூஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர். அல்லாஹ் உங்களை தனது தூதுவத்தினாலும், தன்னுடன் நேரடியாகப் பேசியதாலும் மக்களிடையே உயர்த்திப் பெருமைப் படுத்தினான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று காணவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறுவார்கள்: இன்று என் இறைவன் எப்போதும் இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை; இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான். நான் ஒருவரை (தவறுதலாக) கொன்றேன். அதற்கான அனுமதி எனக்கு அளிக்கப்படவில்லை. இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள்; மர்யத்தின் மகன் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள். அவர்கள் பின்னர் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் சென்று, 'ஈஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். அல்லாஹ்வின் வார்த்தையாக மர்யத்திற்கு அளிக்கப்பட்டவரும், அவனிடமிருந்து வந்த ஆவியும் நீங்கள். நீங்கள் பாலக நிலையில் இருந்தபோதே மக்களுடன் பேசினீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று காணவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறுவார்கள்: 'இன்று என் இறைவன் இதுவரை இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை; இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான். என்று கூறிவிட்டு அவர் எந்தப் பாவத்தையும் குறிப்பிடாது, 'இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள்; முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செல்லுங்கள்.' என்று கூறுவார்கள். அவர்கள் பின்னர் முஹம்மது நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, 'முஹம்ததே! நீங்கள் அல்லாஹ்வின் தூதரும், இறுதி நபியும் (நபிமார்களின் முத்திரையும் ஆவீர்கள். உங்களின் முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று காணவில்லையா?' என்று வேண்டிக் கொள்வார்கள். அப்போது நான் அர்ஷின் கீழ் சென்று, என் இறைவனுக்கு ஸஜ்தாவில் விழுவேன். அப்போது அல்லாஹ் எனக்கு முன்பு யாருக்கும் அளிக்காத வகையில், அவனைப் புகழ்ந்து போற்றும் சிறப்பான வார்த்தைகளை என் இதயத்தில் திறந்து தருவான். பின்னர் சொல்லப்படும்: 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். கேளுங்கள் — உங்களுக்கு வழங்கப்படும். பரிந்துரை செய்யுங்கள் — உங்கள் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும்.' அப்போது நான் என் தலையை உயர்த்தி, 'என் சமூகத்தார் (உம்மத்), என் இறைவா! என் சமூகத்தார்! என் இறைவா! என் சமூகத்தார்!' என்று கூறுவேன்.' அவ்வாறு அவர்களின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும். அப்போது (நபி ஸல் அவர்களிடம்) சொல்லப்படும்: 'முஹம்மதே! உங்கள் உம்மத்தில் எந்த விசாரணையுமின்றி; (ஹிஸாப் இன்றி) சொர்க்கத்தில் நுழையக்கூடியவர்களை, சொர்க்கத்தின் வலப்பக்க வாயிலில் இருந்து உள்ளே அழைத்துச் செல்லுங்கள். மற்ற வாயில்களில் அவர்கள் மற்ற மக்களுடன் இணைந்தே நுழைவார்கள்'. பின்னர் அவர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் உயிர் எவனின் கையில் உள்ளதோ, அவனையே சத்தியமாகக் கொண்டு சொல்கிறேன்! சொர்க்கத்தின் ஒரு வாயிலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம், மக்கா மற்றும் ஸன்ஆ (யமன்) இடையேயான தூரம் போன்றது அல்லது மக்கா மற்றும் புஸ்ரா (ஷாமின் ஹவ்ரான் நரகம்) இடையேயான தூரம் போன்றது'.

فوائد الحديث

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பணிவையும்; அழைப்பை ஏற்று செல்லுதல் மற்றும் பொதுவாக தோழர்களுடன் சேர்ந்து உணவருந்துதல் போன்ற நற்குணங்களை இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகிறது.

நம் நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களையும் விட உயர்ந்தவர் என்பதற்கான சான்று இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டியுள்ளமை.

காழி இயாழ் அவர்கள் கூறுகிறார்: 'ஸெய்யித் (தலைவர்) என்பவர் தன் சமூகத்தை விட மேம்பட்டவரும், கஷ்டங்களில் மக்களுக்கு புகழிடம் தேடுவருமாவார்;. நபி (ஸல்) அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அவர்களின் தலைவர் ஆவார். மறுமை நாளைச் சிறப்பாகக் குறிப்பிட்டதன் காரணம், அந்நாளில் தலைமை முழுமையாக வெளிப்படும் அனைவரும் அவரிடமே இதனை ஒப்படைப்பர். மேலும் ஆதமும் அவரது சந்ததியரும் அனைவரும் அவரின் கொடியின் கீழ் இருப்பார்கள்.

அல்லாஹ் முதலில் ஆதம் மற்றும் பிற நபிமார்களிடம் கேட்குமாறு மக்களுக்கு உள்ளுணர்வை அளித்தன் நுட்டபமானது, இறுதியில் நம் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகத்தான். ஏனெனில் அவரே அல்லாஹ்விடத்தில் உயர் அந்தஸ்த்திலும், முழுமையான நெருக்கத்திலும் உச்ச நிலையில் உள்ளவராவார்.

ஒருவர் தேவையுடன் அணுகும்போது, கேட்கப்படுபவரின் சிறந்த பண்புகளை முன்வைத்து பேசுவது அனுமதிக்கப்பட்டதும், இது பதில் சாதகமான கிடைப்பதற்கு ஏற்றதுமான முறையாகும்.

ஒரு விடயத்தைச் செய்ய முடியாதவர் மரியாதையுடன் காரணம் கூறி மறுப்பது அனுமதிக்கப்பட்டது. மேலும், அதைச் செய்யத் தகுதியானவரிடம் வழி காட்டுவது சிறந்ததாகும்.

மறுமை நாளில் மக்களுக்கு ஏற்படும் பெரும் பயங்கர நிலை மற்றும் மஹ்ஷரின் அகோரமான நிலை- கடுமை -விளக்கப்படுகிறது.

நபிமார்கள் தாங்கள் அந்த நிலைக்கு அதாவது ஷபாஅத் செய்வதற்கு தகுதியற்றவர்கள் என உணர்ந்து தங்கள் முந்தைய நிகழ்வுகளை நினைத்து பணிவுடன் நடந்துகொண்டனர்.

மறுமை நாளில் 'பெரும் பரிந்துரை' (அஷ்-ஷஃபாஅத் அல்-உழ்மா) உண்டு என்பதை உறுதிப்படுத்தப்படுதல். அது படைப்புகளுக்கிடையிலான இறுதித் தீர்ப்பாகும்.

நபி (ஸல்) அவர்களுக்கு 'வஸீலா' மற்றும் 'மகாமு மஹ்மூத்' எனும் உயர்ந்த நிலை வழங்கப்படும் என்பதை இந்த ஹதீஸ் உறுதி செய்கிறது.

அல்லாஹ்வின் புகழ்கள் முடிவற்றவை. அதனால் அந்த நிலைமையில் அல்லாஹ் தனது தூதருக்கு முன்பு யாருக்கும் கொடுக்காத வகையில் சிறப்பான புகழ்ச்சிகளை அளிக்கிறான்.

முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத் சிறந்த சமூகமாகும்; சொர்க்கத்தில் நுழைவதில் அவர்களுக்கு தனித்துவம் உண்டு. விசாரணையின்றி நுழைவோர் அவர்களுக்கென்ற ஒரு சிறப்பு வாயிலில் நுழைவார்கள்; மற்ற வாயில்களில் மற்ற மக்களுடன் சேர்ந்து நுழைவார்கள்.

التصنيفات

மறுமை வாழ்வு